districts

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 6 நரிக்குறவ மாணவர்கள் தேர்ச்சி

மயிலாடுதுறை, மே 11 - 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் சமூக மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அச்சமூக மக்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் பல தடைகளைத் தாண்டி, தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பல்ல வராயன்பேட்டை கிராமத்தில் உள்ள  நரிக்குறவர் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இங்கு உள்ள மாணவர்கள், பயன்பெறும் வகையில் குடியிருப்புக்கு  உள்ளேயே தனியார் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் சுபாஷ் சந்திர போஸ்  உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டு, நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 8 ஆம் வகுப்பு வரை இலவசமாகக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்பின்னரும் மாணவர்கள் கல்வியைத் தொடர, அறக்கட்டளை சார்பில் தேவையான உதவிகள் செய் யப்பட்டு வருகின்றன. இங்கு படித்த மாணவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இங்கு பயின்ற 8 பேரில் வெண்ணிலா, அர்ஜுன், சக்தி, ஈஸ்வரன், சஞ்சய், தனலெட்சுமி ஆகிய 6 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் வெண்ணிலா  500-க்கு 357 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நீடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயசுந்தரம், சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, ஆசிரி யர்கள் மற்றும் நரிக்குறவ சமுதாய மக்கள் என அனைவரும் இனிப்புகள் வழங்கி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். முன்னதாக, இதே குடியிருப்பைச் சேர்ந்த வீரசிவாஜி என்ற மாணவர் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், 600-க்கு 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.